போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 04-08-2023
தேசியம் :-
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் அளித்த தகவலின்படி, ''2015-16- இல் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் மூலம் அரசு தேசிய மனநலக் கணக்கெடுப்பு 12 மாநிலங்களில் நடத்தப்பட்டது.
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவான மனநலக் கோளாறுகள், கடுமையான மனநலக் கோளாறுகள், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் (புகையிலை உபயோகக் கோளாறு நீங்கலாக) உள்ளிட்ட மனநலக் கோளாறுகளின் பாதிப்பு சுமார் 10.6 சதவிகிதம் என்று அந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேசம் :-
- சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன.
- இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2000 தினார் (ரூ.5,37,800) அபராதமும் விதிக்கப்படும்.
- இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரியால் (ரூ.22 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது.
- மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும்.
- 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையம் பயன்படுத்த வேண்டும்.
- 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதி.
தமிழ்நாடு :-
- தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச்சிகிச்சை அமைப்பின்(NOTTO) 13வது இந்திய உறுப்பு தானத்திற்கான தினம் ஆகஸ்ட் 3-இல் அனுசரிக்கப்பட்டது.
- இதை முன்னிட்டு,இந்தியா முழுவதும் உறுப்பு தானத்திற்கான சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், அமைப்புகள், மாநிலங்கள் மற்றும் பலதரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது.
- இதில், இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு NOTTO அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாட்டில் Transplant Authority of Tamil Nadu(TRANSTAN) என்ற அமைப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கட்டுப்படுத்துகிறது.
- 1994-இல் Transplantation of Human Organs Act என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய பிறகு, இறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1995-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டது.
- இதனை தொடர்ந்து தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா்.
- இதனை ஒழுங்குபடுத்த 2015-இல் Transplant Authority of Tamil Nadu உருவாக்கப்பட்டது.
- 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
- உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்திலுள்ள மாநிலம் - தமிழ்நாடு
விளையாட்டு செய்திகள் :-
- அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE உலகக் கோப்பை செஸ் தொடரில் 17 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் 2-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
- இதன் மூலம் FIDE -வின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி 9-வது இடத்தை பிடித்தார்.
- விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
- செப்டம்பர் 1-ஆம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், ஆனந்தை விட முன்னிலையில் இருந்தால் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உருவெடுப்பார்.
- 1987-ஆம் ஆண்டு முதல் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவம் :-
- கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா.
- இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவ (Nursing) பிரிவில் சேர்ந்து 38 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
- படிப்படியாக பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று, தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- தமிழ்நாட்டிலிருந்து முப்படைகளுக்கும் தலைமையாக விளங்கும் ராணுவத்தின் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்திருக்கும் முதல் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோரஸ் ஆவார்.
Follow us