போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS 03-08-2023
தேசியம் :-
- இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் (கேசினோ) கட்டப்படும் முழு பந்தய தொகை மீதுதான் 28 சதவீத GST விதிக்கப்படும் என்றும் இது அக்டோபா் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று காணொலி வழியாக ஆகஸ்ட் 2 கூடிய 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
- இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுகள் மீதான வரி விதிப்பு குறித்த விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதை அறிய, 6 மாதங்களுக்குப் பிறகு அல்லது அடுத்த ஆண்டு ஏப்ரலில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.
GST கவுன்சில் பற்றிய குறிப்புகள்
- GST தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட அரசியலமைப்பு கூட்டாட்சி அமைப்பாகும்.
- GST கவுன்சில் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 279 A
- GST கவுன்சில் தலைமையகம் - டெல்லி
- GST கவுன்சிலின் தலைவர் - மத்திய நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்)
- GST கவுன்சில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 33
- மத்திய அரசின் உறுப்பினர்கள் – 2(நிதியமைச்சரும் துணை நிதியமைச்சரும்)
- மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 31
- GST கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 50% பேர் இடம்பெற்றிருக்க வேண்டும் (தற்போதைய Quorum - 17)
- கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த ஒரு முடிவும் அதிகபட்சமாக 75% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
- இரண்டு உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அரசாங்கத்திற்கான மதிப்பு - மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு (33%)
- மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு(67%) அனைத்து மாநிலங்களும் சேர்ந்து பகிர்ந்துகொள்கின்றன.
- பெரும்பான்மைக்கு 75% தேவைப்படுகிறது ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 67% வாக்குகள் மட்டுமே உள்ளதால், இந்த வாக்களிப்பு விகிதம் கவுன்சிலில் மத்திய அரசை அதிக சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.
- மேலும் மத்திய அரசுக்கு 33% வாக்குகள் மட்டுமே உள்ளதால், சில மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் தனியாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது.
தமிழ் நாடு :-
- திருப்பத்தூா் மாவட்டத்தில் 30 நாள்களில் பல்வேறு இடங்களில் 1,546 பண்ணைக் குட்டைகள் அமைத்ததற்காக ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியனுக்கு உலக சாதனை படைப்பு அங்கீகார சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- தமிழகம் முழுவதும் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், திருப்பத்துாா் மாவட்டத்தில் 700 தனிநபா் பண்ணைக் குட்டைகள், 700 சமுதாய பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணி ஜூலை 1 முதல் தொடங்கி 30-ஆம் தேதி நிறைவடைந்தது.
- அதன்படி, மாவட்டம் முழுவதும் 1,558 பண்ணைக் குட்டைகள் வெட்டி முடிக்கப்பட்டது. இதில், 1,546 பண்ணைக் குட்டைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- அதில், ஒரு பண்ணைக் குட்டை அமைக்க 670 மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டது.
- மாவட்டத்தில் அமைக்கப்படும் பண்ணைக் குட்டைகள் உலக சாதனை விதிப்படி, பண்ணைக் குட்டைகள் 5 அடி ஆழம், 30 அடி அகலம், 60 அடி நீளம் இருக்க வேண்டும். ஆனால் திருப்பத்தூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,558 பண்ணைக் குட்டைகளின் ஆழம் 6 அடி, அகலம் 36 அடி, நீளம் 72 அடி ஆகும்.
- நீலகிரி மாவட்டம் தெப்பாக்காடு யானைகள் முகாமில் தற்காலிக பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளி, தற்போது முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு
- 2023-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் பொம்மன், பெள்ளி தம்பதியனர் நடித்திருந்தனர்.
பொருளாதாரம் :-
- இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ஆம் தேதி வெளியிட்டது.
- இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் மாற்றிக்கொள்ளலாம் என காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. அதாவது பழைய ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட்டாகவோ அல்லது அதற்கு ஈடான மாற்று கரன்சியாகவே தரப்பட்டுள்ளது .
- ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பின் போது இந்த வகை நோட்டுகள் புழக்கத்தில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புக்கு இருந்தன.
- ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் திரும்பப் பெற்றுவிட்டன. இதையடுத்து, எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.42,000 கோடி அளவுக்கே உள்ளது.
விளையாட்டு செய்திகள் :-
- ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தல் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்குகிறது.
- நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றன.
- 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரை முதன்முறையாக இந்தியா நடத்துகிறது.
- சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் 16 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நடைபெறுகிறது. கடைசியாக 2007-ஆம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.
முக்கிய நாட்கள் :-
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு தினம் இன்று(ஆடி பதினெட்டாம் நாள்) கடைப்பிடிக்கப்படுகிறது.
தீரன் சின்னமலையின் வரலாறு
- ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் (1756) பிறந்தவர். இயற்பெயர் தீர்த்தகிரி. பள்ளிப் பருவத்தில் ‘சர்க்கரை’ என அழைக்கப்பட்டார்.
- அப்பகுதி, மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குப் போவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற இவர், வரிப்பணத்தைக் கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார். ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்’ என்று வரி கொண்டுசென்ற ஊழியரிடம் கூறினார்.
- அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.நம் நாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அடிமைப்படுத்தி வருவதை தடுக்க விரும்பினார்.
- ஹைதர் அலியின் மறைவுக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனியினரை எதிர்த்து திப்பு சுல்தான் கடும் போர் செய்தார்.
- சின்னமலையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு மைசூர் சென்றார். சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களைக் கைப்பற்ற திப்புவுக்கு துணை நின்றது இவரது படை.
- குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில், சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1799-ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், களத்திலேயே திப்பு சுல்தான் மரணமடைந்தார். திப்புவின் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டைக் கட்டிய சின்னமலை, பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார்.
- பல ஆயுதங்களையும் தயாரித்தார். பிரெஞ்சுக்காரர்கள் உதவியுடன் பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.
- விருப்பாச்சி கோபால நாயக்கர், மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியோருடன் இணைந்து 1800- ஆம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்த்து கம்பெனியின் 5-ஆம் பட்டாளத்தை அழிக்கத் திட்டமிட்டார். எதிர்பாராத சில நிகழ்வுகளால் இந்த புரட்சிப் படை தோல்வியுற்றது.
- தொடர்ந்து தன் முயற்சியைக் கைவிடாத தீரன் சின்னமலை, 1801-ஆம் ஆண்டில் பவானி - காவிரிக் கரையில் நடைபெற்ற போரில் தன் முழுபலத்தையும் கொண்டு ஆங்கிலேயப் படைகளை தகர்த்தார்.
- 1802-ஆம் ஆண்டு சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1804ஆம் ஆண்டு அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் வென்று வெற்றிகளை பதிவு செய்தார் அவர்.
- சின்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று: 1801--இல் காவிரிக்கரையில் நடைபெற்ற போர், 1802-ஆம் ஆண்டு ஓடாநிலையில் நடந்த போர்;1804-இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும்.
- இவரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை கைது செய்தது. சங்ககிரி கோட்டைக்குக் கொண்டுசென்று போலியாக விசாரணை நடத்தி, 1805 ஜூலை 31(ஆடி பதினெட்டாம் நாள்) அன்று தூக்கிலிட்டது.
- பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்தவரும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவருமான தீரன் சின்னமலை 49 வயதில் (1805) மறைந்தார்.
- போர்களிலும், இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும், பல கோயில்களுக்கு திருப்பணிகளும் செய்தார். இவரது கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை பட்டாலி, கவுண்டம்பாளையத்தில் உள்ளன.
- தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் இவருக்கு சிலையும், ஓடாநிலையில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் 2005-இல் மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம் செய்தது.
Follow us