போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 28-07-2023
தேசியம் :-
- மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய 5 சட்டத்திருத்தங்கள்
- சட்டப்பிரிவு 83 - நாடாளுமன்ற இரு அவைகளின் பதவிக்காலம்
- சட்டப்பிரிவு 85 - குடியரசுத் தலைவரால் மக்களவைக் கலைக்கப்படுவது
- சட்டப்பிரிவு 172- மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்
- சட்டப்பிரிவு 174 - மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது
- சட்டப்பிரிவு 356 - மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி
முக்கிய குறிப்புகள்
- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
- ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றத்துடன் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகள் செலுத்த வேண்டியது வரும். ஒன்று மாநில சட்டசபைக்கு, மற்றொன்று நாடாளுமன்றத்திற்கு என வாக்களிக்க வேண்டும்.
- இந்தியாவில் 1951-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.
- அதன் பிறகு, 1968 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.
- சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு
- பேறுகால நலச்சட்டம் 1961-இன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது.
- தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- செமிகான் இந்தியா மாநாடு 2023’ என்ற பெயரில் செமிகண்டக்டர் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், சந்திரசேகர், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
- மைக்ரோன் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபாக்ஸ்கான், SEMI, AMD போன்ற செமிகண்டக்டர் துறையின் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
- இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை அமைக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கம்
- குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் ஹிராசர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- இது 2,500 ஏக்கர் நிலத்தில் ரூ,1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
- இங்கு 3.04 கி.மீ நீளத்தில் 45 மீட்டர் அகலத்தில் நவீன ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
- இங்கு ஒரே நேரத்தில் 14 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். இது மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்டு விமான நிலையம் ஆகும்.
- அதன்பின், சவுராஷ்டிரா நர்மதா அவதாரன் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் சவுராஷ்டிரா பகுதியில் 52,398 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். 95 கிராமங்களைச் சேர்ந்த 98,000 மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
- மணிப்பூர் விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- சுதந்திர இந்திய வரலாற்றில் இது 28-வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும்
விதிமுறைகள்
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 75,‘மக்களவையில், மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது(Collective Responsibility)’ என்று சொல்கிறதே தவிர, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை.
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 118, நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.
- அதன்படி மக்களவையின் விதி 198(Rule 198), நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.
- எந்த ஒரு மக்களவை உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கலாம். ஆனால், அவருக்கு ஆதரவாக 50 மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்து இருக்க வேண்டும்.
- மாநிலங்களவை உறுப்பினர்கள் அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டுவரவோ, அது தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவோ முடியாது.
- நாடாளுமன்ற மக்கள் அவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, அதற்கான காரணத்தை உறுப்பினர் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை.
- 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும்.
- மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.
சுதந்திரத்திற்கு பின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்
வ. எண் | ஆண்டு | பிரதமா் | தாக்கல் செய்தவா் | ஆதரித்தோா் | எதிா்த்தோா் |
1 | 1963 | ஜவாஹா்லால் நேரு | ஆச்சாா்ய கிருபளானி | 62 | 347 |
2 | 1964 | லால் பகதூா் சாஸ்திரி | என்.சி.சாட்டா்ஜி (ஹிந்து மகாசபை) | 50 | 307 |
3 | 1965 | லால் பகதூா் சாஸ்திரி | எஸ்.என்.துவிவேதி (பிரஜா சோஷலிஸ கட்சி) | 44 | 315 |
4 | 1965 | லால் பகதூா் சாஸ்திரி | எம்.ஆா்.மாசானி (சுதந்திர கட்சி) | 66 | 318 |
5 | 1966 | இந்திரா காந்தி | ஹிரேந்திரநாத் முகா்ஜி (இந்திய கம்யூனிஸ்ட்) | 61 | 270 |
6 | 1966 | இந்திரா காந்தி | யு.எம்.திரிவேதி (பாரதிய ஜன சங்கம்) | 36 | 235 |
7 | 1967 | இந்திரா காந்தி | அடல் பிகாரி வாஜ்பாய் (பாரதிய ஜன சங்கம்) | 162 | 257 |
8 | 1967 | இந்திரா காந்தி | மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) | 88 | 215 |
9 | 1968 | இந்திரா காந்தி | பல்ராஜ் மதோக் (பாரதிய ஜன சங்கம்) | 75 | 215 |
10 | 1968 | இந்திரா காந்தி | கன்வா் லால் குப்தா (பாரதிய ஜன சங்கம்) | 90 | 222 |
11 | 1969 | இந்திரா காந்தி | பி.ராமமூா்த்தி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | 86 | 215 |
12 | 1970 | இந்திரா காந்தி | மது லிமயே (சம்யுக்த சோஷலிஸ கட்சி) | 137 | 243 |
13 | 1973 | இந்திரா காந்தி | ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | 54 | 251 |
14 | 1974 | இந்திரா காந்தி | ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி | |
15 | 1974 | இந்திரா காந்தி | ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | 63 | 297 |
16 | 1975 | இந்திரா காந்தி | ஜோதிா்மய் பாசு (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி | |
17 | 1978 | மொராா்ஜி தேசாய் | சி.எம்.ஸ்டீபன் (காங்கிரஸ்) | குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி | |
18 | 1979 | மொராா்ஜி தேசாய் | ஒய்.பி.சவாண் (காங்கிரஸ்) | வாக்கெடுப்புக்கு முன்பு தேசாய் ராஜினாமா செய்தார் | |
19 | 1981 | இந்திரா காந்தி | ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் (சமதா கட்சி) | 92 | 278 |
20 | 1981 | இந்திரா காந்தி | சமா் முகா்ஜி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | 86 | 297 |
21 | 1982 | இந்திரா காந்தி | ஹெச்.என்.பகுகுணா (பாரதிய லோக் தளம்) | 112 | 333 |
22 | 1987 | ராஜீவ் காந்தி | சி.மாதவ ரெட்டி (தெலுகு தேசம் கட்சி) | குரல் வாக்கெடுப்பு மூலமாகத் தோல்வி | |
23 | 1992 | பி.வி.நரசிம்ம ராவ் | ஜஸ்வந்த் சிங் (பாஜக) | 225 | 271 |
24 | 1992 | பி.வி.நரசிம்ம ராவ் | அடல் பிகாரி வாஜ்பாய் (பாஜக) | 111 | 336 |
25 | 1993 | பி.வி.நரசிம்ம ராவ் | அஜய் முகோபாத்யாய (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) | 251 | 265 |
26 | 2003 | அடல் பிகாரி வாஜ்பாய் | சோனியா காந்தி (காங்கிரஸ்) | 189 | 314 |
27 | 2018 | நரேந்திர மோடி | ஸ்ரீநிவாஸ் கேசினேனி (தெலுகு தேசம் கட்சி) | 135 | 330 |
தோல்வியடைந்த நம்பிக்கை கோரும்(Confidence motion) தீா்மானங்கள்
- ஆளும் அரசுகள் மீது எதிா்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், ஆளும் அரசால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானங்களும் தோல்வியைத் தழுவிய வரலாறு உள்ளது.
- 1990-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் வி.பி. சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீா்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தது. ராமா் கோயில் விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால், தீா்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.
- 1997-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமா் ஹெச்.டி. தேவெ கௌடா அரசு தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு 158 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனா். 292 எம்.பி. க்கள் எதிராக வாக்களித்ததால், தீா்மானம் தோல்வி அடைந்து அரசு கவிழ்ந்தது.
- அடல் பிகாரி வாஜ்பாய் 1998-இல் ஆட்சி அமைத்து 13 மாத ஆட்சிக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரலில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தைத் தாக்கல் செய்தாா். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற்றதால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தீா்மானம் தோல்வி அடைந்து வாஜ்பாய் பிரதமா் பதவியை இழந்தாா்.
- அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாக்க செங்கல்பட்டில் 137 ஹெக்டர் பரப்பில், சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைப்பது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சர் தெரஸ் கோஃபே ஆகியோரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொள்கையோடு ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: "காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் கிரகத்தை நிலைநிறுத்துதல்"
முக்கிய குறிப்பு
- உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம்(International Union for Conservation of Nature) தொடங்கப்பட்ட ஆண்டு - 1948
- ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான ஜூலை 28-இல் அவரது நினைவாக ஆண்டுதோறும் உலக ஹெபடைடிஸ்(கல்லீரல் அழற்சி) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.
- 2023-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: 'One life, one liver'
முக்கிய குறிப்புகள்
- ஹெபடைட்டிஸ் என்ற சொல்லுக்கு கல்லீரலின் வீக்கம் என்று பொருள்.
- வைரஸ்கள் உள்ளிட்ட பிற தொற்றுகள், ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் காரணமாக ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது.
- இவை நோயின் தாக்கத்தினைப்பொறுத்து A, B, C, D மற்றும் E என 5 வகைப்படுத்தப்படுகிறது.
Follow us