போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 26-07-2023
தேசியம் :-
- 2022- 2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துபூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார்.
- இது கடந்த 2021- 22 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247% அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
- 2021-22 மற்றும் 2022-23 நிதி ஆண்டுகளில் நீக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) பற்றிய குறிப்புகள்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act - MGNREGA) 2005-இல் இயற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
- முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2009-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இத்திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு திறன் தேவைப்படாத உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
- ஆரம்பத்தில் ஒருநாள் கூலி ரூ.100 என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், படிப்படியாக இந்த கூலித்தொகை உயர்த்தப்பட்டு, இப்போது தமிழ்நாட்டில் ஒருநாள் கூலியாக ரூ.294 வழங்கப்படுகிறது.
- மேலும், ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள், அவர் வசிக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்பட வேண்டும். வேலை வழங்கப்படாவிட்டால் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- இத்திட்டத்தின் மூலம் சாலைகள், நீர் நிலைகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கிராம ஊராட்சி மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வேலை வாய்ப்பு, கிராமப்புற பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் இந்த திட்டம் வழங்குவதாக கூறப்படுகிறது.
- கடந்த 2014-ஆம் ஆண்டு உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில்,''இத்திட்டம் ஊரக வளர்ச்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு''என்று குறிப்பிட்டது.
தமிழ் நாடு :-
- வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் திருச்சியில் நடைபெறும் “வேளாண் சங்கமம்- 2023” கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 27) தொடங்கி வைக்க உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- இந்த கண்காட்சிக்கென ஏறத்தாழ 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 230 உள்ளரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது
- இந்த கண்காட்சியில் மாநில அரசின் 17 துறைகள், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த 3 பல்கலைக்கழகங்கள், 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் சார்பில் அரங்குகள் இடம் பெறுகின்றது.
- வேளாண் சங்கமத்தில் தினமும் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீதம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
வேளாண் சங்கமத்தின் சிறப்பம்சங்கள்:
- வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய இரகங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெறுகின்றன.
முக்கிய நாட்கள் :-
- சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது.
- 2015 -இல் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 26 அன்று சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் கொண்டாட யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இத்தினத்தின் நோக்கம் - சதுப்புநில காடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது.
சதுப்பு நிலக் காடுகளின் சிறப்புகள்
- கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடலோரப் பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள்.
- உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக் காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன.
- இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்துவருகின்றன
முக்கிய குறிப்புகள்
- உலகில் காணப்படும் சதுப்பு நிலக் காடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தெற்காசிய நாடுகளில் உள்ளன. இந்தோனேஷியாவில் மட்டும் 23% உள்ளன.
- மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன காடுகள் வங்க தேசம் வரை நீண்டு உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாக உள்ளது.
- சதுப்பு நிலக் காடுகள்,மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள், ஒடிசாவில் பித்தர்கனிகா, ஆந்திராவில் கோரிங்கா, தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை மற்றும் மன்னார் வளைகுடா, கேரளாவில் வேம்பநாடு மற்றும் கொச்சின் உவர் நீர் நிலைகளில் வளர்ந்து காணப்படுகின்றன.
- சதுப்பு நிலக் காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம் - மேற்கு வங்கம்
இராணுவம் :-
- ஜூலை 26,1999 அன்று பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
- கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கார்கில் போர் பற்றிய தகவல்கள்
- கார்கில், ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் (-48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும்.
- ஆகையால் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில்,செப்டம்பர் 15 முதல் ஏப்ரல் 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து திரும்பி விடுவர். ஏப்ரலின் பிற்பாதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வது வழக்கம்.
- கடந்த 1999 ஏப்ரலில் கார்கிலில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது.
- இது திடீரென நடந்தது அல்ல, பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட 'ஆப்பரேஷன் பாதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் என்பதை இந்தியா உணர்ந்தது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அப்போதைய ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷாரப் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
- பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா, ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
- உயரமான மலைத்தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்தப் போரில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் சரவணன் உட்பட 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
- இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை 26 வரை நடைபெற்றது.
- ஜூலை 14,1999 அன்று அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘ஆபரேஷன் விஜய்’ வெற்றியடைந்ததாக அறிவித்தார்.
- ஜூலை 26, 1999 அன்று பாகிஸ்தான் துருப்புக்கள் யாவும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது இந்தியாவுக்கு ஆதரவாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
- கார்கில் மலையைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கேப்டன் கெய்ஷிங் கிளிஃபோர்ட் நோங்ரம் போன்ற வீரர்களுக்கு மரணத்திற்குப் பின் பரம் வீர் சக்ரா மற்றும் மகாவீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
- கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜூலை 26-ஆம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நமக்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை நினைவுகூர்வோம்.
Follow us