போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் 17-07-2023
சர்வதேசம்:-
- பிரதமர் மோடி ஜூலை 15 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமதுவை சந்தித்துப் பேசினார்.
- அப்போது அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்தியாவின் ரூபாய், அமீரகத்தின் திர்ஹாமில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மேலும் இந்தியாவின் யுபிஐ, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐபிபி பணப் பரிவர்த்தனை நடைமுறைகள் இணைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இருதரப்பு பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சி அடையும்.
- இப்போதைய நிலையில் ஜெர்மனி, பிரிட்டன், நேபாளம், பூடான், சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், கென்யா, மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட 18 நாடுகள் இந்திய ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
முக்கிய குறிப்புகள்
- மத்திய அரசின் முயற்சியால் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து ‘I2U2’ (India-Israel-UAE-USA) என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டணியில் சவுதி அரேபியாவும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் - அப்துல் நாசர்
தமிழ்நாடு :-
- மதுரையில் ரூ.215 கோடியில் 6 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 அன்று திறந்து வைத்தார்.
நூலகத்தின் சிறப்பம்சங்கள்
- கலைஞர் நூலகத்திற்கு கீழ் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுரஅடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.
- இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கீழ் தளத்தில் வாகன நிறுத்தம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைகின்றன.
- தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைகின்றன.
- முதல் தளத்தில் கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம்,அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.
- 2-வது தளத்தில் தமிழ் நூல்கள்பிரிவு மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.
- 3-வது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :-
- கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவின் செய்தி நிறுவனம் ‘லிசா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்திருந்தது.
- இந்த சூழலில் கன்னட மொழியில் பேசும் ‘சௌந்தர்யா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது கன்னட தொலைக்காட்சியான ‘பவர் டிவி’.
விருதுகள் :-
- பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார்.
- இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
- இந்த விருது 1802 ஆம் ஆண்டு, நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது.
விளையாட்டு செய்திகள் :-
- லண்டனில் நடைபெற்ற நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்.
- 20 வயதான அல்காரஸ் வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2022-ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார்.
- வாகை சூடிய அல்காரசுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
- முன்னதாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நாட்கள் :-
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17-ஆம் தேதி உலக நீதி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- உலக அளவில் பல்வேறு குற்றங்களால், மனித உரிமை மீறிய செயல்பாடுகளால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கான நீதி உடனடியாக கிடைக்கப்பட வேண்டும் என்பதே இந்நாளினை கடைபிடிப்பதற்கான நோக்கம் ஆகும்.
உலக நீதி தினத்தின் வரலாறு
- ஜூலை 17, 1998-இல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது.
- இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
- 2010-ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்ட மதிப்பாய்வுக் கூட்டத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17-ஆம் தேதியைச் உலக நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
- இந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
International Court of Justice (ICJ) vs International Criminal Court
- இன்று உலகில் இரண்டு சர்வதேச நீதி அமைப்புகள் உள்ளன.
- ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice). இதில் ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் உறுப்பினராக இருக்கும்.
- இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை மட்டுமே இது விசாரிக்கிறது. தனிநபர்களை தண்டிக்கமுடியாது.
- மற்றொன்று ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court). இதில் 1998-இல் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருக்கும்.
- மோசமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உலகத்தின் எந்த பகுதியில் நடக்கும் போர் குற்றங்களை இந்த குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.
முக்கிய குறிப்புகள்
- சர்வதேச நீதிமன்றம்(ICJ) நிறுவப்பட்ட ஆண்டு - ஜூன் 26, 1945
- ICJ தலைமையகம் - ஹேக், நெதர்லாந்து
- சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்(ICC) நிறுவப்பட்ட ஆண்டு - ஜூலை 1, 2002
- ICC தலைமையகம் - ஹேக், நெதர்லாந்து..
Follow us