போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 22-07-2023
தேசியம் :-
1906 ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது வரை, நமது மூவர்ணக் கொடி பல்வேறு நிறத்தையும் வடிவத்தையும் கொண்டு அமைக்கப்பட்டது.
முதல் முறை
- ஆகஸ்ட் 7, 1906 - முதன் முதலாக நம் நாட்டில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் நாட்டின் முதல் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.சுதந்திர போராட்ட தியாகிகள் சச்சிந்திர பிரசாத் போஸ் அந்த கொடியை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
- அந்த கொடியில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் கிடைமட்டமாக கோடுகள் வரையப்பட்டிருந்தன.பச்சை நிறப்பகுதியில் 8 மலரும் தாமரைகளும், சிவப்பு நிற பகுதியில் சூரியனும் பிறையும் இருப்பது போல் அவை வடிவமைக்கப்பட்டது. மூவர்ண கொடியின் மையத்தில் தேவநாகரி மொழியில் வந்தே மாதரம் என பொறிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது முறை
- ஆகஸ்ட் 22, 1907- இரண்டாவது முறையாக புதிய வடிவத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சோசியலிச கூட்டத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்திய தேசிய கொடி வெளிநாட்டில் ஏற்றப்பட்டது இது தான் முதல் முறை. இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் மேடம் பிகாய்ஜி காமா என்று அழைக்கப்படும் பெண்மணி ஆவார்.
மூன்றாவது முறை
- டாக்டர் அன்னி பெசண்ட் மற்றும் பால கங்காதர் திலகர் இணைந்து மாறுபட்ட வடிவத்தில், 1917-இல் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான கொடியை வடிவமைத்தனர்.
- அதில் மூன்று வர்ணங்களுக்கு பதிலாக 9 இரட்டை வர்ண கோடுகள் (5 சிவப்பு, 4 பச்சை) கொண்டு, சப்தரிஷி வடிவமைப்பில் 7 நட்சத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளை பிறையும் நட்சத்திரமும் வலது பக்க முனையில் பொறிக்கப்பட்டிருந்தது.கொடியின் இடப்பக்க மேற்புறத்தில் யூனியன் ஜாக் கொடி சித்திரிக்கப்பட்டிருந்தது. தங்களது நோக்கம் முழுமையான சுதந்திரமே என்பதால் தேச பக்தர்கள் இந்தக் கொடியை ஏற்கவில்லை.
நான்காவது முறை
- 1921 ஏப்ரலில் விஜயவாடாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வெள்ளை, பச்சை, சிவப்பு ஆகிய மூவண்ணங்கள் கொண்ட நடுவில் ராட்டையுடன் கூடிய கொடி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தேசியவாதியும் பேராசிரியருமான பிங்கல வெங்கய்யாவால் வடிவமைக்கப்பட்டு காந்தியடிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
- இந்த வடிவத்தை கண்ட அண்ணல் காந்தியடிகள், இதே வடிவத்தை சற்று மாற்றியமைத்து, இந்திய தேசியக் கொடியாக உருவாக்கலாம் என்று எண்ணினார். சிவப்பு - இந்து மதத்தினரையும், பச்சை - இஸ்லாமிய மதத்தையும், வெள்ளை நிறம் - அமைதியும் மற்ற அனைத்து மதத்தினரையும் குறிக்கும் வகையில் அமைக்கப்படலாம் என்று காந்தியடிகளின் எண்ணப்படியே, வெங்கையா அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார்.
ஐந்தாவது முறை
- 1931 ஏப்ரலில் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் டாக்டர் பட்டாபி சீதாராமையா தலைமையில் தேசியக்கொடி வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டது.
- இந்தக் குழுவின் பரிந்துரைப்படி காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களுடன் நடுவில் ராட்டையையும் கொண்டதாக மூவண்ணக்கொடி உருவாக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே இந்திய தேசிய காங்கிரசின் கொடியும் ஆனது.
அரசியலமைப்பு நிர்ணயசபையின் முடிவு
- 1946-இல் அரசியலமைப்பு நிர்ணயசபை அமைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தனிக்குழு ஒன்றை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்த அவை அமைத்தது.
- இந்தக்குழுவின் பரிந்துரைப்படி இந்தியாவிற்கான புதிய மூவண்ணக் கொடியின் வெள்ளைப் பகுதியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக தர்மச்சக்கரத்துடன் கூடிய (சட்டம், நீதிக்கான அசோகப் பேரரசின் சக்கரச் சின்னம்) கொடியை 1947 ஜூலை 22-இல் அரசியலமைப்பு நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.
- இந்தியாவின் முதல் தேசியக்கொடியை 1947 ஆகஸ்ட் 16 அன்று டெல்லி செங்கோட்டையில் அன்றைய பிரதமர் நேரு ஏற்றினார்.
இந்திய தேசியக் கொடி நிறம் விளக்கம்
- காவி நிறம் - பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
- வெண்மை நிறம் - உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது.
- பச்சை நிறம் - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
- தேசிய கொடியில் நடுவில் உள்ள அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தேசியக் கொடியேற்றும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டிய விதிகள்
- தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனில், அது நாட்டுக்கு அவமரியாதை இழைத்ததற்குச் சமமாகும். அதற்கு உரிய தண்டனைகள் சட்டப்படி வழங்கப்படும். தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிமுறைகளை தேசிய சின்னங்கள் அவமரியாதை சட்டம் (1971), தேசியக் கொடி விதிகள் (2002) ஆகியவை விரிவாக வழங்குகின்றன.
- தேசியக் கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்த கொடி எந்த அளவிலானதாகவும் இருக்கலாம். ஆனால்,அகலம் (3) : உயரம் (2) அதாவது 3:2 என்ற அளவில் இருக்க வேண்டும்.
- தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றக்கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது.
- கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை காட்சிப்படுத்தப்படக் கூடாது
- தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது
- தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
- தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது
- தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது
- மேசை மீது விரிப்பாகவோ, மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது
- அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது.
- மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ (embroid) தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது
- சேதமடைந்த தேசியக் கொடியானது தனிப்பட்ட முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அதன் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் எரிக்கப்படலாம். காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை குடிமக்கள் தரையில் வீழும் படி விடக்கூடாது. தண்ணீரில் மிதக்கும்படி விடக்கூடாது.
தமிழ் நாடு :-
- முதியோர், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- முதியோர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள் :-
- பழங்களின் ராஜாவாக கருதப்படும் மாம்பழங்களின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 -ஆம் தேதி தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாம்பழம் குறித்த தகவல்கள்
- தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாக சொல்லப்படும் மாம்பழம் முதன்முதலில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
- மாம்பழம் என்ற சொல் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் 'மாங்கோ ' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பெயர் மலாயா வார்த்தையான 'மன்னா' என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.
- இதன் அறிவியல் பெயர்: Mangifera indica
- உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன.
- ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் என்ற விகிதத்தில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.
- இந்தியாவுக்கு அடுத்ததாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் விளைகின்றன.
- உலகில் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.
- மாம்பழம் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாகவும் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது.
- மாம்பழங்களில் வைட்டமின் 'சி' யை தவிர புரதம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துக்களும் நிறைந்துள்ளன.
- 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் சர்வதேச மாம்பழத் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற மாம்பழ வகைகள்
- அல்போன்சா மற்றும் மராத்வாடா கேசர் - மகாராஷ்டிரா
- பனாரஸ் லாங்டா ஆம், மலிஹபாடி தாஷேரி மற்றும் ரதௌல் -உத்திர பிரதேசம்
- ரேவா சுந்தர்ஜா - மத்திய பிரதேசம்
- பங்கனப்பள்ளி - ஆந்திரா மற்றும் தெலுங்கானா
- அப்பெமிடி மற்றும் கரி இஷாத் - கர்நாடகா
- ஹிம்சாகர், ஃபஸ்லி மற்றும் லக்ஷ்மன் போக்- மேற்கு வங்காளம்
- ஜர்தாலு - பீகார்
- கிர் கேசர் - குஜராத்
- எடையூர் சில்லி மற்றும் குட்டியாட்டூர் மாம்பழம் - கேரளா
- ஜூலை 30,1886-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நாராாயணசாமி - சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி.
- 1902-இல் தந்தையின் ஊக்குவிப்பால் அவரது ஆதரவுடன் வீட்டில் இருந்தபடியே மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
- பெண் என்பதால் அவருக்கு கல்லூரியில் சேர்வதற்கு இடம் வழங்கப்படவில்லை.
- 1904- இல் கல்வியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா கல்வி உதவித்தொகையுடன் உயர்கல்வி படிக்க இடம் கொடுத்தார்.
- 1907 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் 'எம்பிசிஎம்' மருத்துவக் கல்வியில் சேர்ந்தார்.
- 1912- இல் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவமனையிலும் என சில காலம் சென்னையில் பணியாற்றியுள்ளார்.
- 1914-இல் மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28-வது வயதில் சாதி மறுத்துத் திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி. தம்மை சமமாக நடத்தவேண்டும், தனது விருப்பங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு அவர் ஒப்புக்கொண்டார்.
- 1917-இல் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் முத்துலட்சுமி இணைந்து பணியாற்றினார்.
- இந்திய மாதர் சங்கம் நடத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்
- 1925-இல் கணவர் சுந்தரரெட்டி மற்றும் குழந்தைகளுடன் மேல் படிப்புக்காக லண்டன் சென்றார் முத்துலட்சுமி.
- அங்கிருந்தபடியே 1926இல் பாரிஸ் சென்று அங்கு நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் இந்திய மாதர் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
- இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து அம்மாநாட்டில் முத்துலட்சுமி பேசியது மாநாட்டில் கவனம்பெற்றிருக்கிறது.
- இந்திய மாதர் சங்கத்தின் மூலம் துணை அமைப்புகளைப் போல உருவாக்கப்பட்ட குழந்தைகள் உதவிச் சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளில் முத்துலட்சுமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.
- பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று முத்துலட்சுமி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
- 1926-இல் சட்ட மேலவையில் நியமன உறுப்பினரானார்.
- 1927-இல் பி.டி. ராஜன் முன்மொழிய ஒரு மனதாகத் துணைத்தலைவர் ஆனார். இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை துணைத்தலைவர் எனும் பெருமையைப் பெற்றார்.
- குழந்தைகள் திருமண தடுப்புச்சட்டம், கோவில்களில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், பாலியல் தொழில் தடுப்பு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முக்கிய பங்கு வகித்தார்
- 1927-இல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பெரியார் ஆகியோரிடம் கலந்துரையாடிவிட்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்திற்கு பின்னர் 1947-இல் தான் அது சட்டமாக்கப்பட்டது.
- 1930-இல் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்கு தமது வீட்டில் ‘அவ்வை இல்லம்’ என்ற பெயரில் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி. 1936- இல் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாறுக்கு மாற்றப்பட்டது.
- 1932- இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் முத்துலட்சுமி பங்கேற்று, பெண்ணுரிமைக்கான குரலை லண்டனில் ஒலித்தார்.
- 1935-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கவுள்ள நோக்கத்தை அறிவித்தார். பலரும் ஆதரவளித்தனர். படிப்படியாக பணிகளைத் தொடங்கி 1952இல் முடிவடைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.
- 1954 ஜூன் 18-ஆம் தேதி முதல் புற்றுநோய் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனையான இதில் தற்போது ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 1937-இல் சென்னை மாநகரத் தலைமையாளர்- 'ஆல்டன் உமன்' என்ற பதவி முத்துலட்சுமிக்கு கிடைத்தது. மாநகராட்சியில் உயர் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான்.
- அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளது. 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
- 1956-இல் முத்துலட்சுமி அம்மையாரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருதினை வழங்கியது.
- வாழ்நாள் முழுவதும் பெண்கள் சேவைக்காகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி அம்மையார், தனது 82ஆவது வயதில் 1968-இல் ஜூலை மாதம் 22-ஆம் நாளில் மறைந்தார்.
Follow us