போட்டித் தேர்வு நோக்கிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் ( IMPORTANT CURRENT AFFAIRS ) 19-07-2023
தேசியம்:-
- ஐ.நா. சபையில் ஹிந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பத்து லட்சம் டாலா் (சுமாா் ரூ.8.20 கோடி) நிதியை நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது.
- இந்த நிதிக்கான காசோலையை ஐ.நா.வின் உலகத் தொடா்பு துறையின் தலைவா் மெலிசா ஃப்ளெமிங்கிடம் இந்திய தூதா் ருசிரா கம்போஜ் வழங்கினாா்.
முக்கிய குறிப்பு
- ஐ.நா.வில் ஹிந்தியை ஊக்குவிக்கும் வகையிலும் சா்வதேச பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள ஹிந்தி பேசும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் ‘ஐ.நா.வில் ஹிந்தி’ என்ற திட்டம் 2018-இல் தொடங்கப்பட்டது.
- தற்போது ஐ.நா. தொடா்பான செய்திகள் ஐ.நா. செய்திகள் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
சர்வதேசம் :-
- ஐ.நா. பொதுச் சபையின் 78-ஆவது அமா்வு, வரும் செப்டம்பா் 5-இல் தொடங்குகிறது.
- இந்த அமா்வின் உயா்நிலை பொது விவாதம், செப்டம்பா் 19-இல் தொடங்கி நடைபெறவுள்ளது.
- இந்த விவாத அமா்வில் உரையாற்றும் தலைவா்களின் தற்காலிக பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
- அதில், இந்திய அரசின் தலைவா் (பிரதமா் மோடி), செப்டம்பா் 22-ஆம் தேதி உரையாற்றுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
- ஐ.நா. பொதுச் சபையின் 78-ஆவது அமா்வின் தலைவர் - டென்னிஸ் பிரான்சிஸ்
விருதுகள் :-
- அறிவியல் ஆராய்ச்சிக்கான உலகளாவிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் மதிப்புமிக்க 'எனி விருது' இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை வேதியியல் துறை பேராசிரியர் டி. பிரதீப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பேராசிரியர் டி.பிரதீப், நீரில் இருந்து நச்சு மாசுக்களை அகற்றுவதற்காக மலிவு விலையில் மேம்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தமான தண்ணீரை வழங்கியதற்காக மற்றும் நானோ அளவிலான பொருட்களைப் பற்றிய தனது பணிக்காக இத்தாலிய எரிசக்தி நிறுவனமான 'எனி விருது'க்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மூலம் 1 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுத்தமான தண்ணீரை பெறுகின்றனர்.
- இந்த விருது மூலம் பேராசிரியர் பிரதீப் மற்றும் அவருடைய குழுவுக்கு விருதுடன் ரூ.2 கோடி ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
- இதற்கான நிகழ்ச்சி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் பேராசிரியர் பிரதீப்புக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதை இத்தாலி அதிபர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியமனங்கள் மற்றும் முக்கிய நபர்கள்:-
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம், வழக்குரைஞா்கள் என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோா்களை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
முக்கிய குறிப்புக்கள்
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு – 217
- உயர் நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர்- குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது- 62
- உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் தகுதி - நீதி நிா்வாகப் பணியில் இந்திய நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் பணி புாிந்திருக்க வேண்டும்.
- உயர் நீதிமன்றத்தின் நீதிப்பேராணை அதிகார வரம்பு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு(Writ Jurisdiction) - 226
- சென்னை உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஆகஸ்ட் 15,1862
- இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம் - கல்கத்தா உயர் நீதிமன்றம்( 1 ஜூலை 1862)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி - டி.முத்துச்சாமி(1877)
- சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திரத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட முதல் இந்திய தலைமை நீதிபதி - பி.வி.ராஜமன்னார்(1948)
- சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - கந்த குமாரி பட்நாகர்(1992)
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு – 2004
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை: 75
- சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதி பரிபாலணம்(அதிகார வரம்பு எல்லை) - தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவை யூனியன் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.
- மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட உயர் நீதிமன்றம் - குவஹாத்தி உயர் நீதிமன்றம்(அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கியது)
- தனி நீதிமன்றம் கொண்ட ஒரே யூனியன் பிரதேசம் - டெல்லி(1966)
- இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றங்களை அமைக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமளித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் - 7வது சட்டத்திருத்தம்,1956
- இந்தியாவில் உள்ள மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
- 1891 -இல் சட்ட நிகழ்வுகள், தகவல்களை வெளியிடும் சட்ட செய்தி இதழ்(Madras Law Journal) உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்ட செய்தி இதழாகும்.
முக்கிய நாட்கள் :-
இந்திய வங்கிகளின் வரலாறு
சுதந்திரத்திற்கு முன்
- இந்தியாவின் முதல் வங்கி - இந்துஸ்தான் வங்கி (1770) கல்கத்தாவில் தோற்றுவிக்கப்பட்டது
- இந்த வங்கியானது 1832-ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டது
- அன்றைய காலகட்டத்தில், மூன்று பிரசிடென்சி வங்கிகள் செயல்பட்டு வந்தன- வங்காள வங்கி (Bank of Bengal-1809), மும்பை வங்கி (Bank of Bombay-1840) மற்றும் சென்னை வங்கி (Bank of Madras-1843).
- இந்தியர்களால் 1865-இல் அலஹாபாத் வங்கி தொடங்கப்பட்டது.
- 1894-இல் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடங்கப்பட்டது.
- 1921-இல், மூன்று பிரசிடென்சி வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது.
- 1929-ஆம் ஆண்டு பிரஸெல்ஸில் (Brussels) நடைபெற்ற சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் (International monetary conference) ஒவ்வொரு நாட்டிலும் மைய வங்கி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டது.
- இதனை தொடர்ந்து,இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-இன்படி,1935 ஏப்ரல் 1-ஆம் தேதி கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.
- 1937-இல் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின்
- இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஜனவரி 1, 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.
- 1955-ஆம் ஆண்டு இம்பிரியல் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1969-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ரூ.50 கோடிக்குமேல் வைப்புத்தொகையாக வைத்திருந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கினார். அப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல்,
- அலகாபாத் வங்கி.
- பேங்க் ஆஃப் பரோடா.
- பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா.
- கனரா வங்கி.
- சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா.
- இந்தியன் பேங்க்.
- யூனியன் பேங்க்.
- தேனா பேங்க்.
- பஞ்சாப் நேஷனல் பேங்க்.
- யூகோ பேங்க்.
- யுனைடெட் பேங்க்.
- பேங்க் ஆஃப் இந்தியா.
- சிண்டிகேட் பேங்க்
- இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்.
- 1969-இல் இந்த நடவடிக்கைக்கு சுமார் ரூ.8,740 கோடியை மத்திய அரசு செலவிட்டது. அதிகபட்சமாக சென்ட்ரல் பேங்க் உரிமையாளர்களுக்கு 1,750 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இரு முக்கியமான வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.250 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.230 கோடியும் வழங்கப்பட்டன.
- 1980-இல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி, ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று ரூ.200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை வைத்திருந்த மேலும் ஆறு வங்கிகளைத் தேசியமயமாக்கினார். அவை,
- ஆந்திரா பேங்க்.
- கார்ப்பரேஷன் பேங்க்.
- நியூ பேங்க் ஆஃப் இந்தியா.
- ஓரியன்டல் பேங்க் ஆஃப் இந்தியா.
- பஞ்சாப் - சிந்து பேங்க்.
- விஜயா பேங்க்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றிய குறிப்புகள்
- 1991-இல் அந்நிய செலாவணி சிக்கலில் இருந்த சமயத்தில் நரசிம்மன் கமிட்டி வங்கிகள் இணைப்பினை பரிந்துரை செய்தது.
- 1993-இல் நியூ பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
- ஏப்ரல் 1, 2017 - பைக்கனர் ஸ்டேட் வங்கி, ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவநாங்கூர் ஸ்டேட் வங்கி மறறும் பாரத மகிளா வாங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
- 2019 -இல் விஜயா வங்கியும், தேனா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.
- ஏப்ரல் 1,2020- 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக மாற்றப்பட்டது.
- இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டது.
- கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டது
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்பட்டது.
- 2017 -இல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் தற்போது வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு 12-ஆக குறைந்துள்ளது.
தற்போதுள்ள பொதுத்துறை வங்கிகள்
- பாரத ஸ்டேட் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
- பேங்க் ஆஃப் பரோடா
- பேங்க் ஆஃப் இந்தியா
- கனரா வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
- யூகோ வங்கி
- பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி
- மகாராஷ்டிரா வங்கி
தரவரிசை பட்டியல் :-
- எந்த நாட்டின் கடவுச்சீட்டு அதிக பலனுடையது என்பது குறித்த தரவை லண்டனைச் சேர்ந்த Henley Passport Index என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- முதலிடத்தில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உள்ளது. இதன்மூலம் விசா இல்லாமல் 192 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
- ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டின் கடவுச்சீட்டு 2-ஆம் இடம்பெற்றுள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டுகள் மூலம் விசா இல்லாமல் 190 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
- அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்ஸம்பர்க், தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு 3-வது இடம் பிடித்துள்ளன. இதன்மூலம் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
- இந்தியாவின் கடவுச்சீட்டு 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 57 இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
- பாகிஸ்தான் கடவுச்சீட்டு 100வது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் (103) பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டு மூலம் 27 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம்.
முக்கிய குறிப்புகள்
- கடவுச்சீட்டில் நான்கு வகைகள் உள்ளன.
- சாதாரண கடவுச்சீட்டு(Ordinary Passport) சாதாரண குடிமக்களுக்கும், துறை சார்ந்த கடவுச்சீட்டு (Official) அரசாங்க ஊழியர்களுக்கும், முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கான (Diplomatic) கடவுச்சீட்டு, வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கான ஜம்போ கடவுச்சீட்டு (Jumbo) போன்றவை வழங்கப்படுகின்றன.
- Henley Passport Index அளித்துள்ள தரவுகளின்படி உலகம் முழுவதும் 227 இடங்களில் கடவுச்சீட்டு கட்டாயம்.
Follow us